தனியார் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படுமா? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, April 2, 2019

தனியார் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படுமா?



வெளியூர்களில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தபால் ஓட்டு வழங்கினால் மட்டுமே வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த முடியும் என்ற சூழல் உள்ளது.

ஒவ்வொரு தேர்தலின்போதும், அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையைத் தவறாமல் ஆற்றுவதற்கு, வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த வாக்குப் பதிவு 70 சதவீதத்தை கூட இதுவரை எட்ட முடியாத நிலை உள்ளது. அதிக விழிப்புணர்வு கொண்ட மாநிலமான தமிழகத்தின் வாக்குப்பதிவு சராசரி 75 சதவீதத்தை கடக்க முடியவில்லை.

தமிழகத்தில் 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 72.98 சதவீதமாக இருந்த சராசரி வாக்குப்பதிவு, 2014-இல் 73.76 சதவீதமாக மட்டுமே உயர்ந்தது. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்குக் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என கடந்த 2014 தேர்தலில் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், வாக்குப்பதிவு சதவீதம் எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.
தமிழகத்தின் வாக்குப்பதிவு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு, கிராமப்புற வாக்காளர்களே காரணமாக இருந்து வருகின்றனர். மேட்டுக்குடி மற்றும் உயர் நடுத்தர வகுப்பு வாக்காளர்கள் அதிகமுள்ள பகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதம் கணிசமாக உயரவில்லை.

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு: இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 100 சதவீத வாக்களிப்புக்கான விழிப்புணர்வு பிரசாரம், தமிழகம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் பலன் முழுமையாகக் கிடைக்க வேண்டுமெனில், வெளியூர்களில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தேர்தல் நாளின் போது கட்டாய விடுமுறை அளிப்பதோடு நின்று விடாமல், அவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் வெ.சிவசங்கரன் கூறியது: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான இளைஞர்கள், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் வசிக்கின்றனர். தேர்தல் நாளில் அளிக்கப்படும் ஒருநாள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால், வெளியூர்களில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.

No comments: