டிக்
டாக் செயலி தடை செய்யப்படுவது உறுதி எனவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
சில
நாட்களுக்கு முன்பு, பல்வேறு கலாச்சார சீர்கேடுகளுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் டிக் டாக் செயலி காரணமாக இருப்பதால் அதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அவருக்குப் பதிலளித்த தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக்கைத் தடை செய்ய மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து டிக் டாக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பயனர்களைப் பாதுகாப்பதற்காக ரிப்போர்டிங் அம்சங்கள் உட்பட பல வலுவான அமைப்புகள் எங்களிடம் உள்ளன.
விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத வீடியோக்களை சட்ட அமலாக்க அமைப்புகளால் ரிப்போர்ட் செய்வதற்கு இயலும். உள்நாட்டு சட்ட விதிமுறைகளை நாங்கள் மதிக்கிறோம். சட்ட அமலாக்க அமைப்புகளுடன் மேலும் திறம்பட செயல்படுவதற்காக இந்தியாவுக்காகத் தலைமை அதிகாரி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ஒன்பது புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், “மரண விளையாட்டான ப்ளூவேலை தடை செய்தது போலவே தமிழகத்தில் டிக் டாக்கும் தடை செய்யப்படுவது உறுதி. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் கண்டனத்துக்குரியது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு வலுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
No comments:
Post a Comment