அரசு பள்ளிகளை மூடக் கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை : மாணவர்கள் சிரமத்திற்கு உட்படும் வகையில் பள்ளிகளை இணைக்கவோ, மூடவோ கூடாது என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியை ஊக்கப்படுத்தவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், மாணவ, மாணவிகளை அரசுப் பள்ளிகளுக்கு ஈர்க்கவும் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது என்ற காரணத்தை கூறி சுமார் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாக
வெளிவரும் செய்திகள் வேதனைக்குரியது. தமிழகத்தில் அரசால் இயக்கப்படும் பள்ளிகளுக்கு முழு பொறுப்பும் தமிழக அரசுக்குத் தான் உண்டு. அதே நேரத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் நிதியுதவியும் முக்கியம் தான். இந்நிலையில் மத்திய அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று தெரிந்தால் மத்திய அரசை வலியுறுத்தி நிதியுதவியைப் பெற வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அதனை விட்டுவிட்டு நிதியைக் காரணம் காட்டி எக்காரணத்திற்காகவும் அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் ஒரு போதும் அரசுக்கு வரக்கூடாது.
எனவே
தமிழக அரசு மாநிலம் முழுவதும் இருக்கின்ற எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடவோ, மாணவர்கள் சிரமத்திற்கு உட்படும் வகையில் இணைக்கவோ முன்வரக் கூடாது. மேலும் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியும், போதிய வசதிகள் செய்து கொடுத்தும், போதிய ஆசிரியர்களை பணியில் இருக்கும் வகையிலும் பள்ளிகளை தொடர்ந்து இயக்கி மாணவ, மாணவிகளை அரசுப் பள்ளிகளுக்கு நாடி வரும் நல்ல சூழலை ஏற்படுத்த தமிழக அரசு அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment