Header Ads

Header ADS

அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடம் இருக்காது!


கட்டாயக் கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைப் பெறுவதற்காக, விரைவில் மத்திய அமைச்சரைச் சந்திக்க உள்ளதாக, தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 
ஈரோட்டில் இன்று (செப்டம்பர் 11) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அப்போது, பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்க, அரசுப் பள்ளிகளில் ரூ.7,000 சம்பளத்தில் 2000 ஆசிரியர்கள் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் இந்த நியமனம் நடைபெறும் என்றும், எதிர்காலத்தில் பள்ளிகளில் காலிப் பணியிடம் என்ற ஒன்று இருக்காது என்றும் கூறினார்.

ஆசிரியைகளின் மகப்பேறுக்கான 9 மாத விடுமுறையின்போது, அவர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்ற நிதி ரூ.30,000 மற்றும் ரூ.50,000 என அந்தந்த பள்ளிகளின் நிலைமைக்கு ஏற்ப உயர்த்தி வருகிறோம். அதைக் கொண்டு பணியாளர்களைத் தற்காலிகமாக நியமித்துக்கொள்ள அந்தந்த பள்ளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறதுஎன்று தெரிவித்தார்.
 
பள்ளிக் கழிப்பிடங்கள் சுத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். தமிழகத்திலுள்ள 57 ஆயிரம் பள்ளிகளில் 82 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அதனால், பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை உடனடியாகச் செய்துவிட முடியாது. படிப்படியாகத்தான் செய்ய முடியும்.
 
பள்ளிகளைச் சுத்தம் செய்வதற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வெள்ளையடிக்கப்படும். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய 1,500 கோடி ரூபாயில் 102 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள தொகையைப் பெறுவதற்காக மத்திய அமைச்சரை விரைவில் சந்திக்கவுள்ளேன்என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார் செங்கோட்டையன்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.