மதிய உணவுத் திட்டம் தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, August 2, 2018

மதிய உணவுத் திட்டம் தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம்


பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் விதத்தை இணையதளம் வாயிலாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க தவறியதற்காக
தமிழகம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.


பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று கடந்த 2013ஆம் ஆண்டு மனு தொடுத்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவுகள் சுத்தமானதாக உள்ளதா என்று கண்காணிப்பதற்கு தேசிய, மாநில அளவில் 2 குழுக்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.



இதேபோல், மதிய உணவு திட்டத்தை இணையதளம் வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னார்வ தொண்டு அமைப்பின் வழக்குரைஞர் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை சில மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்கள் கூறியதாவது:


தமிழகம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய 3 மாநிலங்களும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாதது அதிருப்தி அளிக்கிறது. இதற்காக அந்த மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை சிறார் கைதிகள் விவகாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில், உச்ச நீதிமன்ற சட்ட சேவைகள் அமைப்பிடம் 4 வாரங்களுக்குள் மேற்கண்ட 3 மாநிலங்களும் டெபாசிட் செய்ய வேண்டும்.

இதேபோல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அருணாசலப் பிரதேச மாநிலம், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர்ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களும் செயல்படுத்தவில்லை. எனினும், இவைகளுக்கு அபராதம் விதிக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மேலும் அவசாகம் அளிக்கிறோம். இந்த அவகாசத்துக்குள் அருணாசலப் பிரதேசம், புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர்ஹவேலி ஆகியவை உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் என எதிர்பார்க்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்

No comments: