எவ்வாறு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாசிப்புத் திறனை முன்னேற்ற முடியும்.? – ஊர்வசி சர்மா (தமிழில் ராம் கோபால் ) தேனி சுந்தர்.. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, July 12, 2020

எவ்வாறு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாசிப்புத் திறனை முன்னேற்ற முடியும்.? – ஊர்வசி சர்மா (தமிழில் ராம் கோபால் ) தேனி சுந்தர்..


 



ஒரு குழந்தையின் கற்றல் திறனுக்கும் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வாசிப்பு என்பது இன்றிமையாதது. சிறு வயதிலேயே புத்தகங்கள் மேலும் வாசித்தலின் மேலும் பிரியத்தை உண்டாக்கிவிட்டால் அது அவர்களின் மொழித்திறன் வளர்ச்சிக்கும், பல்வேறு சொற்களின் மீதான பரிச்சயத்திற்கும் அதாவது சொல்லகராதிக்கும் நிச்சயம் உதவும். இதோடு மட்டுமல்லாது அவர்களின் மனவளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். அவர்களை உணர்வுமயப்படுத்தும்.

வயதுவந்தோர் தங்களது குழந்தைகளுக்கும் இச்சமூகத்திற்கும் வழங்க முடிந்த ஒரு பரிசு என்பது குழந்தைகளுக்கு வாசித்து காட்டுவதே ஆகும் என்பது கார்ல் சாகன் {Carl Sagan} அவர்களின் மிகப் பிரபலமான கூற்று.

எப்படி துவங்குவது என தெரியவில்லையா?

இதோ வீட்டில் ஒரு புத்தக பிரியரை உருவாக்குவதற்கான மூன்று வழிகள்.

குழந்தைகள் அவர்களாக வாசிக்கும் வயது வரும் வரைக்கும் நீங்கள் வாசிப்பதை கதைகளை சொல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் அவர்களாகவே வாசிக்கத் துவங்குகையில், அவர்களோடு கதை சொல்வதில் கதை கேட்பதில் வாசிப்பதில் என இவற்றை ஒரு இனிமையான பொழுதுபோக்காக மாற்றுங்கள். மெதுவாக, நீங்கள் வாசித்து காட்டுவதில் இருந்து மாற்றி அவர்களாகவே வாசிக்க உதவுங்கள். அது உங்கள் உதவி
இல்லாமல் வாசிக்கத் தூண்டுவதோடு இதுவரை அவர்கள் கண்டிராத ஒரு தன்னம்பிக்கையை அவர்களுக்குத் தரும். சுய வாசிப்பு இதுவரை பழகிராத கடினமான வார்த்தைகளை அவர்கள் புரிந்துணர உதவும் ஒரு சூழலை அனுமதிக்கும். உண்மையில், பெற்றோர்கள் தான் குழந்தைகளின் ரோல் மாடல்கள். பெற்றோர்களின் பழக்கங்களுக்கே குழந்தைகள் தங்களை தகவமைத்து கொள்வர் என்பதை புரிந்துகொள்ளுங்கள். தினமும் இரவு படுக்கப் போவதற்கு முன்னதாக நீங்கள் வாசிப்பதை காணும் குழந்தைகள் விரைவில் அவர்களும் உங்கள் செயலை பிரதிபலிப்பார்கள். அதேபோல, நீங்கள் வாசிப்பது உங்களை மகிழ்விக்கிறது என்பதை காணும் அவர்கள் வாசித்தல் என்பது கற்க மட்டுமே அல்ல அது ஒரு இனிமையான பொழுதுபோக்கு என்பதையும் உணர்வார்கள்.

பெற்றோர்களின் மடியில் தான் குழந்தைகள் வாசகர்களாக மாறுகிறார்கள்” – எமிலி புக்வால்ட்
எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். வாசிக்க தயங்குகிற எல்லா குழந்தைகளையும் புத்தகங்களை வாசிக்க ஊக்கப்படுத்த முடியாது. ஆனாலும் அவர்கள் வாசிக்க துவங்க வாசிப்பதை உறுதிசெய்ய எண்ணற்ற பல வழிகள் உள்ளன. உங்கள் குழந்தைகள் வாசித்தல் திறனைப் பயில புத்தகங்கள் மட்டுமே தான் உதவும் என்பதல்லாது அவர்கள் உலகைச் சுற்றியுள்ள பல விஷயங்கள்/பொருட்கள் மூலம் வாசிக்கலாம் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
சாலையிலுள்ள குறியீடுகளை படிக்க ஊக்கப்படுத்துங்கள். அவ்வாறே காலநிலை குறித்த அறிவிப்புகளையும் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடமிருந்து வரும் இமெயில் ஆகியவற்றை படிக்க உதவுங்கள். உங்கள் குழந்தை விரும்பி செய்யும் செயல்களுக்கும் வாசித்தல் உதவிகரமாக இருக்கும் என்பதையும் வாசித்தல் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு ஒருங்கிணைந்த ஒரு நடவடிக்கை என்பதையும் அவர்கள் உணர்வதின் மூலம் வாசித்தல் கலையை வளர்த்தெடுக்க அது உதவிடும். அவர்கள் விரும்பி வாசிக்காத போதும் இது உதவிடும்.

வாசித்தல் என்பதை கடமையாக அல்லது கட்டளையாக குழந்தைகளிடம் கொடுக்க கூடாது. மாறாக ஒரு அரிய பொக்கிஷமாக கொடுக்கப்பட வேண்டும்” – கேட் டிகேமிலோ {Kate DiCamillo}
 
உங்கள் குழந்தைகள் கஷ்டப்பட்டு வாசித்தலில் முன்னேற்றம் காணுகிற போது பொறுமை காத்திடுங்கள்.
ஒவ்வொரு குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஒரு தனித்த வேகம் உண்டு. உங்கள் குழந்தைகள் வாசித்தலில் ஆர்வம் காட்டவில்லை எனில், உண்மையாகவே அவர்களுக்கு வாசித்தல் ஒரு பிடிக்காத ஒன்றாகவும் இருக்கக் கூடும். இந்த பிரச்சனையின் மூலம் என்பது ஒருவேளை அவர்களிடம் இருக்கும் புத்தகங்களை வாசிக்க அவர்களுக்கு பிடிக்காத நிலையாகவும் இருக்கலாம். அவர்களுக்கு பிடித்தமான ஒரு வகையை அல்லது ஒரு வகையான கதைகளைத் தேர்வு செய்து தருகிற பொழுது அவர்கள் ஊக்கம் பெற்று வாசிக்கத் துவங்கலாம். விதவிதமான கதைகளை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகத்தின் உள் இருக்கும் விஷயம் எவ்வளவு பிடித்தமான ஒன்றாக இருக்கிறதோ, அவ்வளவிற்கு குழந்தைகள் விரும்பி வாசிப்பர்.

தொடர்ந்த கவனமும், அக்கறையும், பயிற்சியும் இருக்கிற பொழுதில் வாசிக்க சிரமப்படுகிறவர்கள் கூட அவர்கள் வயதுக்குப் பொருத்தமான விஷயங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவர். உங்கள் குழந்தைகள் வாசித்தல் கலையை கற்பதில் உதவி தேவைப்படுவதாக நீங்கள் நினைக்கும் பட்சத்தில் அவர்களின் ஆசிரியரோடு பேசுங்கள், அதோடு அவர்களைக் கண்காணித்து அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவும் நடவடிக்கைகளில் மனப்பூர்வமாக ஈடுபடுங்கள். உங்கள் உதவி என்பது அவர்களின் புரிந்துணரும் திறனுக்கும், இலக்கணம், மொழியாளுகை மற்றும் உச்சரித்தலுக்கும் உதவிட அவர்களின் வெற்றிக்கு நீங்கள் அடித்தளம் இட முடியும்.

உதவிகள் கேட்டிட அஞ்சிடவோ தயங்கிடவோ வேண்டாம். ஆனால் ஒரு பெற்றோராக உங்கள் குழந்தை கற்றிட வளர்ந்திட நீங்கள் எண்ணற்ற வழிகளில் உதவிட முடியும் என்பதை உணருங்கள்.

இரத்தின சுருக்கமாக சொல்வதெனில், “வாசிக்க வெறுக்கும் குழந்தை என்ற ஒன்று இல்லவே இல்லை, மாறாக சரியான புத்தகத்தை இதுவரை அக்குழந்தை கண்டெடுக்கவில்லை என்பதே உண்மைஎன்கிறார் பிராங்க் செராபினி (Frank Serafini)

ஆங்கில மூலம் : ஊர்வசி சர்மா

No comments: