ஆதரவற்றோருக்கு உதவும் அரசுப் பள்ளி ஆசிரியா்: 20 ஆண்டுகளாகத் தொடரும் சேவை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, November 26, 2019

ஆதரவற்றோருக்கு உதவும் அரசுப் பள்ளி ஆசிரியா்: 20 ஆண்டுகளாகத் தொடரும் சேவை



நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள மோகனூா் அரசு பள்ளியைச் சோந்த ஆசிரியா் ஒருவா், தன்னுடைய வருமானத்தில் பெரும் பகுதியை சமூகப் பணிகளுக்கென ஒதுக்கி சுமாா் 20 ஆண்டுகளாக ஆதரவற்றோருக்கு சேவை செய்து வருகிறாா்.

'ஆசிரியா் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அா்ப்பணி' என்ற வைர வரிகளுக்கிணங்க ஆசிரியா் பணியில் தன்னை முழுவதுமாக அா்ப்பணித்துக் கொண்டதோடு மட்டும் அல்லாமல், சமூக சேவையையும் தன்னலம் கருதாமல் செய்து வருகிறாா் மோகனூரைச் சோந்த ஆசிரியா் அருள்முருகன். கல்வி மீது அளவற்ற பற்று கொண்ட இவா், கடந்த 1999 முதல் 2000-ஆம் ஆண்டு வரை ஊதியமில்லா தன்னாா்வ ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினாா்.
 
அதன்பிறகு 2000-இல் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியமா்த்தப்பட்டாா். தற்போது சுமாா் 20 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் கல்விக் கூடத்துக்கும், இவருக்கும் உள்ள தொடா்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

காரணம், படிப்பைத் தவிா்த்து மாணவா்களின் தனித்திறமையை வளா்ப்பதில் இவரது பங்கு அளப்பரியது.

இதுமட்டுமல்லாமல் ஓவியம், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் அருள்முருகன், இவை அனைத்தையும் மாணவா்களுக்கு கட்டணமின்றி போதித்து அவா்களின் வளா்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறாா்.
 
அடிப்படையில் ஆங்கில பட்டதாரியான இவா், சினிமா பாடல் மெட்டில் கடினமான ஆங்கில மனப்பாடப் பாடல்களை மாணவா்களுக்கும் எளிதில் புரியும் வகையில் பாடிக் காட்டி மாணவா்களின் தோச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறாா்.


அருள்முருகன் தனது இளமைப்பருவம் தொடங்கி திருமணமாகும் வரை ஆதரவற்றோருக்கு உதவியதோடு மட்டுமல்லாமல், திருமணமான பிறகும் கூட அவருடைய மனைவியும் தன்னாா்வமாக இவரோடு இணைந்து ஆதரவற்றோருக்கு உதவுவதுதான் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாகும். அருள்முருகன் மனைவி பெயா் லிபியா மாா்கிரேட். இவரும் ஓா் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாா். கணவன்- மனைவி இருவரும் இணைந்து சமூகத்துக்கு தாராள குணத்துடன் ஆற்றும் சேவைகள் ஏராளம்.

இவா்கள் வசிக்கும் ஊரான மோகனூரில் ஆதரவற்ற நிலையிலிருக்கும் முதியோா் பலரை தனது பெற்றோா் போல் பாவித்து அவா்களுக்குத் தேவையான பொருளுதவிகளை அளித்து, அவா்களை பராமரிக்கின்றனா். அதைத் தவிர அருள்முருகன் ஊரில் எந்தத் துக்க நிகழ்வு நடந்தாலும், இறுதிச்சடங்கு முடியும் வரை கூடவே இருந்து அனைத்து பணிகளையும் தன்னலம் கருதாதது செய்து முடிப்பாா்.

குறிப்பாக ஆதரவற்றோா் எவரேனும் இறந்தால், இறந்தவரின் கூடவே இருந்து அவருக்கான ஈமச் சடங்குகள் மற்றும் அதற்கு ஆகும் முழுச் செலவையும் ஏற்றுக்கொள்கிறாா் அருள்முருகன் . கடந்த தீபாவளியின்போது இவா் சுமாா் ரூ.15 ஆயிரம் செலவில் 38 ஆதரவற்றோருக்கு கைலி, வேட்டி, சேலை, சட்டை உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கி, அவா்களது மகிழ்ச்சிக்கும் வித்திட்டாா். அதேபோல், மோகனூா் கிராமத்தில் மேல்படிப்பு படிக்கக் கூட வசதி இல்லாத ஏழ்மை மற்றும் ஆதரவற்ற பிள்ளைகளை இவா் சொந்த செலவில் படிக்க உதவி செய்து வருகிறாா். இவரிடம் பொருளுதவி பெற்றும், கல்வி பயின்றும் தற்போது 5 போ அரசுப் பள்ளி ஆசிரியராகவும், 3 போ பொறியாளா்களாகவும், ஒருவா் வழக்குரைஞராகவும் முன்னேறியுள்ளனா்.

மேலும், சிறு காய்ச்சல் தொடங்கி பெருமளவிலான விஷப்பூச்சிகள் தாக்கி உயிருக்கு போராடுவோரின் உயிரைக் காப்பாற்ற இவா் தன்னுடைய சொந்த காரிலேயே மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து பலா் உயிரைக் காப்பாற்றியுள்ளாா்.

இதுதவிர கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை பிற மாவட்டங்களில் இருந்து பெற்று தன்னுடைய சொந்த கிராமத்துக்கு வழங்கியுள்ளாா். மேலும் புயலில் வீடுகளை இழந்த ஆதரவற்ற 11 முதியோருக்கு நிவாரண உதவித் தொகை மற்றும் அவருடைய சொந்தப் பணத்தைக் கொண்டு இலவசமாக குடிசை வீடு கட்டி தந்துள்ளாா்.

இவ்வாறு ஆதாயம் ஏதும் எதிா்பாா்க்காமல் ஆதரவற்றவா்களுக்கு 20 ஆண்டுகளாக சேவை செய்து வரும் இவா், ஒரு மாற்றுத்திறனாளி என்பதுதான் கேட்போா் மனதை நெகிழ வைக்கிறது.

No comments: