ஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா? - குமுறும் ஆசிரியர்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, July 2, 2019

ஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா? - குமுறும் ஆசிரியர்கள்



6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாய உரிமையாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம். கற்றல், கற்பித்தல் சூழலில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்த கல்வி உரிமைச் சட்டம், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் TET எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வையும் கட்டாயமாக்கியது. அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஆசிரியராக ஒருவர் பணிபுரிய வேண்டுமெனில், கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆசிரியர்களைத் தகுதிப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த ஆசிரியர் தகுதித்தேர்வு, பல குழப்பங்களுக்கும் வித்திட்டுள்ளது. இது தொடர்பாக நமது வாசகர் .சந்திரன், விகடனின் #DoubtOfCommonMan பகுதிக்கு ஒரு கேள்வியை அனுப்பியிருந்தார்.
"நான் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 20.01.2012-ல் பணி நியமனம் பெற்றேன். பணியில் சேரும்போது எனக்கு TET தேர்வு பற்றிய நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. ஆனால், 16.11.2012 அன்றுதான் எனக்கு 'TET தேர்வு கட்டாயம்' எனத் தெரியப்படுத்தினார்கள். அரசு செய்த தவறால் என்னைப்போல சுமார் 8,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு சட்டபூர்வ தீர்வு என்ன?" என்பதே அவரது கேள்வி.

அவரது கேள்வியைக் கல்வித்துறை அதிகாரிகளின் முன் வைத்தேன். இடைநிலைக் கல்வி இணை இயக்குநரின் உதவியாளர் கிரி நிவாஸ், "2010, ஆகஸ்ட் 23-ம் தேதிக்குப் பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருமே ஆசிரியர் தகுதித் தேர்வான TET எழுதியிருக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார் அழுத்தமாக. அவரிடம் "இந்த ஆணை 2012, நவம்பரில்தான் வெளியிடப்பட்டது என்கிறார்களே?" என்று கேட்டேன்.
"இல்லை. 2011, நவம்பர் மாதம் 15-ம் தேதியே தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. மத்திய அரசின் ஆணைப்படி 2010, ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் இது நடைமுறையில் இருக்கிறது" என்றார்.

TET தேர்வு எழுத பட்டப்படிப்பு மற்றும் பி.எட் அல்லது D.T.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு கிடைக்கும். முன்பு, 150-க்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்றிருந்தது. தற்போது தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 'TET தேர்வு அவசியம்' என்று அரசு ஆணை வெளியிடுவதற்கு முன்பே பணியில் ஒருவர் சேர்ந்திருக்கிறார் என்றால், அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது அவசியம். அவருக்கு கட் ஆஃப் மதிப்பெண் ஏதும் அவசியமில்லை. தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும்.

TET தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், தமிழகத்தில் 2011 ஆண்டிலிருந்து, ஐந்து முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. 2012, 2013, 2014, 2017 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு (2019) தேர்வு நடத்தப்பட்டது. இதனால், பல ஆசிரியர்களால் தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற முடியவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், நீதிமன்றம் இந்தக் காரணத்தை ஏற்கவில்லை. "அவசியம் ஆசிரியர்கள் தகுதித்தேர்வை எழுதியே ஆக வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் வேறெந்த சட்டபூர்வ தீர்வும் சாத்தியமில்லை.
பணிபுரியும் ஆசிரியர்கள் TET தேர்வு எழுதுவதில் பல குழப்பங்கள் நிலவும் சூழலில், அவற்றைத் தெளிவுபடுத்தி ஆசிரியர்களின் கவலை போக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

No comments: