ஓ.பி.சி. (OBC Certificate) சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்?* - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, February 25, 2019

ஓ.பி.சி. (OBC Certificate) சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்?*



மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடுசமூக நீதிக் காவலர், நமது முன்னாள் பாரதப்பி்ரதமர் காலஞ்சென்ற வி.பி. சிங் அவர்களின் முயற்சியால், 1993 முதல் மத்திய அரசு வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான IIT, IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும்.

அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான்றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.
 
இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டாட்சியரால் தான் (தாசில்தார்) தரப்படுகிறது.

ஓபிசி, சான்றிதழ் பெறுவதற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?

1) தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் .பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கின்றன. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது.
இந்த ஜாதிப்பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப்பிரிவில்தான் அதாவது திறந்த போட்டியில்தான் விண்ணப்பிக்க முடியும். இதனை, www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் பார்த்து விபரம் அறிந்துகொள்ளலாம்.
 
2) IAS, IPS போன்ற குரூப் பதவியில் பெற்றோர்கள் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது.

3) GROUP - C அல்லது GROUP - B யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், GROUP - A பதவிக்குச் சென்றாலும், அந்த தகப்பனாரின் குழந்தைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது. அதே நேரத்தில் அந்தக் குழந்தையின் தாய் , GROUP – A பணியில் 40 வயதுக்குள் பதவி உயர்வு பெற்றால், சான்றிதழ் பெற தடையில்லை

4) பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது.

இதில், வியாபாரிகள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பொறி யாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூபாய் ஆறு லட் சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது.
 
அப்படி என்றால், யாருக்குத்தான் ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்?

a). GROUP - A GROUP - B போன்ற பதவி தவிர்த்து, , GROUP - C, GROUP - D போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.

b) மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற வற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட் டோர், அவர்களது ஆண்டு வருமானம், ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும்.

c) விவசாய வருமானம் ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம்.
கிரிமி லேயர் (Creamy Layer-கிலே) முறை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, கிரிமிலேயர் (Creamy Layer-கிலே) முறை முக்கிய பங்கு வகிக்கிறது. கிரிமி லேயர் என்றால் பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் - பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள் என்று அர்த்தம். இதன்படி பார்த்தால் ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பெறுபவருடைய பெற்றோரின் வருமானம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும். சான்றிதழ் பெறுபவரின் வருமானம் கணக்கில் வராது.
 
சான்றிதழை பெறும் நபரின் ஆண்டு வருமானம் ரூபாய் 6 இலட்சத்திற்கு மேல் இருந்து அவரின் பெற்றோரின் வருமானம் ரூபாய் 6 இலட்சத்திற்கு குறைவாக இருந்தாலும், அவர் அந்த சான்றிதழை பெற தகுதியானவர்தான்.
தமிழக அரசின் ஆணை:
ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது;

அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப்பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த ஆணையின்படி, பிற்படுத்தப் பட்டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள்ளிட்ட எந்த பொதுத்துறை நிறுவனங் களில் பணிபுரிந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமானத்தை, கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
 
ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?

இதனைப் பெறுவதற்கு முதலில் தமிழக அரசு வழங்குகின்ற ஜாதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது ஜெராக்ஸ் கடைகளில் ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனை பூர்த்தி (டைப்பிங்) செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும், குடும்ப அட்டை நகலையும், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகலையும், வருமானச் சான்றிதழ் நகலையும் இணைத்திட வேண்டும்.

யாருடைய பெயருக்கு சான்றிதழ் பெற வேண்டுமோ, அவரது பெயருக்கு 20 ரூபாய்க்கான பத்திரம் வாங்கி, நோட்டரி பப்ளிக் வக்கீலிடம் அபிடவிட் பெற்று அதனையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட்டு முதலில் கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சாதாரணமாக நாம் ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பி்ப்பது போலவே, இதற்கும் வி.., ஆர்.. மற்றும் தாசில்தாரிடம் கையொப்பம் பெறவேண்டும்.

அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப்படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச்சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த படிவம், www.persmin.gov.in என்ற இணைய தளத்தில்,OM and Orders என்கிற பகுதி யில், O.M. No.36012/22/93-Estt.(SCT),Date: 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும்.

செல்லுபடியாகும் காலம்

இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்பந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்பதாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும்.

அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படும். மேலும், தேவைப்பட்டால், மீண்டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலை வாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளைகளுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச்சம்பளம் பெறுவோரும், இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறலாம்

No comments: