`எட்டு ஆண்டு வேதனை முடிவுறுமா?’ - ஏக்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, February 15, 2019

`எட்டு ஆண்டு வேதனை முடிவுறுமா?’ - ஏக்கத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்




எட்டு ஆண்டுகளாக பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

காவல்துறை, சாலைப்பணியாளர்கள், 2003 எஸ்மா சட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்குப் பதிலாக நியமனம் செய்யப்பட்டவர்கள் என தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பலரும் நிரந்தரப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட வேலையில், பள்ளிக் கல்வித்துறையில் ஒப்பந்த முறையாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பணியமர்த்தப்பட்ட 16,549 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்தாமல், அதே நிலையில் வைத்திருப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் வேதனையில் உழல்கிறது.
 
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், , ``அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி போன்ற பாடங்களை 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு போதித்து வருகிறோம். 16,549 பகுதிநேர ஆசிரியர்களில் தற்போது சுமார் 12,000 பேர் பணிபுரிகிறோம். இவர்களுக்கு 5,000 ரூபாயில் ஆரம்பித்த சம்பளம், தற்போது 7,700 ரூபாயாக தரப்படுகிறது. இதைத் தாண்டி வேறு எந்தச் சலுகையும் எங்களுக்கு வந்தடைவதில்லை.


 
எங்களுக்கு மே மாத விடுமுறை கிடையாது. அதற்குரிய சம்பளமும் வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த தற்காலிகத் தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு தரப்படும் 10% வருடாந்திர ஊதிய உயர்வு சரிவர தரப்படவில்லை. P.F., E.S.I., மருத்துவ விடுப்பு கிடையாது. ஒருமுறைகூட போனஸ் கண்ணில் காட்டியதில்லை.

ஆந்திராவில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 14,203 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும், மகளிருக்கு 6 மாத மகப்பேறு கால விடுப்பும் தரப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியின்போது இறந்தால், அவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதியாக ரூ.2 லட்சம் தரப்படுகிறது. ஆந்திரா மற்றும் மேற்கு வங்காள அரசுகளைப் போல தமிழக அரசும் அதிகபட்ச ஊதியம், மகப்பேறுகால விடுப்பு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதி போன்றவற்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.

2015 முதல் 2019 (ஜனவரி 22-30) ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த நாள்களில் முழுநேரமும் பள்ளிகளைத் திறந்து நடத்திட அரசு பகுதிநேர ஆசிரியர்களையே பயன்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் வரவில்லை என்றாலும், அவர்களின் வகுப்பை நாங்கள்தான் கவனிக்க வேண்டியதிருக்கிறது. 2017 சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும், அருகில் உள்ள பள்ளிகளில் பணிபுரிய ஏதுவாக பணியிடமாறுதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். ஆனால், இன்னும் சொன்னபடி நடவடிக்கை ஏதும் இல்லை.

தற்போது 11 மாதங்களுக்கு சுமார் ரூ.100 கோடி சம்பளமாக செலவாகிறது. சிறப்பாசிரியர்களாக நிரந்தரப்பணியில் அமர்த்த ஆண்டுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கினாலே போதுமானது. வேலைநிறுத்தக் காலங்களில் அரசின் உத்தரவின்படி பள்ளிகளை இயக்கிய பகுதிநேர ஆசிரியர்களை அரசு அழைத்துப் பேச வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்" என்றார்.

No comments: