குழந்தைகள் மனஅழுத்ததில் உள்ளார்கள் என்பதற்கான அறிகுறிகள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, September 1, 2018

குழந்தைகள் மனஅழுத்ததில் உள்ளார்கள் என்பதற்கான அறிகுறிகள்


Image result for childrens
-டாக்டர்.ஷாலினி

 
உங்கள் செல்ல குழந்தை வளர்ந்து பள்ளிக்கு செல்ல தயாரானவுடன் உங்கள் கடமை என்பது அவர்களை பள்ளிக்கு அனுப்புவது, தயார் செய்வது, சரியாக சாப்பிடுகிறீர்களா என்று சோதனை செய்வது என்று இதனுடன் நின்றுவிடாது. அவர்கள் பள்ளியில் பழகும்விதம், அவர்களின் நண்பர்கள், ஆசிரியர்கள் என அவர்களுடன் தொடர்புடைய அனைத்தையும் கவனித்து பார்க்க வேண்டும்.

குழந்தைகள் மனஅழுத்தம் உள்ளதாக வாய்திறந்து கூறமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு அது மனஅழுத்தம் என்பதே தெரியாது. ஒரு பெற்றோராக அதனை கண்டறிந்து அதனை சரிசெய்ய வேண்டியது உங்கள் கடமையாகும். குழந்தைகளின் நடவடிக்கைகளை வைத்தே அவர்கள் சோகமாக உள்ளார்களா என்பதை கண்டுபித்துவிடலாம். இங்கே அதற்கான அறிகுறிகள் என்னவென்பதை பார்க்கலாம்.
 
பசியில் மாற்றம்

பெரியவர்கள் மனஅழுத்தம் உள்ளபோது தவிர்க்கும் முதல் விஷயம் சாப்பிடாமல் இருப்பது. இதேபோல குழந்தைகளும் சாப்பாட்டின் மீது வெறுப்பு காட்டினாலோ அல்லது சாப்பிடும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ அவர்கள் மனஅழுத்ததில் உள்ளார்கள் என்று அர்த்தம். குறிப்பாக 5 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகள் மனஅழுத்தம் ஏற்பட்டால் சாப்பிடுவதில் ஆர்வம் செலுத்த மாட்டார்கள் என குழந்தை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 
பள்ளிக்கு செல்ல மறுத்தல்

உங்கள் குழந்தை தொடர்ச்சியாக பள்ளிக்கு செல்ல மறுத்தால் பள்ளியில் அவர்களின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் விஷயம் எதுவோ உள்ளது என்று அர்த்தம். பொதுவாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆர்வமாய் இருப்பார்கள் ஏனெனில் அங்குதான் அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் பள்ளிக்கூடத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை தவிர்க்க முடியாத போது அவர்கள் பள்ளிக்கு செல்ல தயக்கம் காட்டுவார்கள். ஆசிரியர்கள் திட்டுவது கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அவ்வாறு தொடர்ந்து குழந்தைகள் பள்ளி செல்ல மறுத்தால் அதற்கான காரணத்தை உடனே கண்டறியுங்கள்.

தலைவலி

உங்கள் குழந்தை அடிக்கடி தலை வலிக்கிறது என்று கூறினால் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். மருத்துவர் அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறிய பின்னும் குழந்தைகள் அதையே கூறினால் அதனை முதல் எச்சரிக்கையென புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளுக்கு தலைவலி ஏற்பட பதட்டமே முக்கிய காரணமாக இருக்கிறது, இதற்கு மறைமுக தூண்டுதலாக இருப்பது மனஅழுத்தம்தான். மனஅழுத்ததால் ஏற்படும் தூக்கமின்மையும் தலைவலிக்கு காரணமாக இருக்கலாம்.

வயிற்று வலி

கடுமையான பணி ஒன்றை செய்யும்போது உங்கள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம். குழந்தைகளும் மனஅழுத்தத்துடன் இருக்கும்போது வயிறு வலிப்பதாகத்தான் கூறுவார்கள். இல்லையெனில் அவர்களுக்கும் நம்மை போன்ற உணர்வுகளே இருக்கலாம். ஆனால் எதுவாக இருப்பினும் அவர்களுக்கு அது வயிற்று வலிதான். ஏனெனில் குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளுக்கு பசிக்கிறதா அல்லது வலிக்கிறதா என்பதை கூற தெளிவாக கூற இயலாது. எனவே உங்கள் குழந்தைகள் தொடர்ந்து வயிற்று வலி என்று புகார் செய்தால் அவர்கள் மனஅழுத்ததில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். செரிமான மண்டலத்திலும் நரம்பு மண்டலங்கள் உள்ளது. மனஅழுத்தம் உள்ளபோது மூளை எவ்வாறு சோர்வடைகிறதோ அதேபோல் வயிறும் சோர்வடையும்.
 
படுக்கையை நனைத்தல்

பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது யாதெனில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் படுக்கையை நனைப்பது அவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளானதன் அறிகுறியாக கூட இருக்கலாம். அது அதிர்ச்சி அல்லது பாலியல் தொற்று போன்றவற்றால் ஏற்பட்டதாக கூட இருக்கலாம். 8 வயது வரை குழந்தைகள் படுக்கையை சிறுநீரில் கழிப்பது சகஜம்தான். இது பள்ளிக்கு செல்லும் பயம், தேர்வு பயம், சுகாதர பிரச்சினை போன்றவற்றால் கூட ஏற்படலாம். இதற்கு அடிப்படை காரணம் மனஅழுத்தம் ஆகும். எனவே குழந்தைகள் தொடர்ந்து படுக்கையை ஈரமாக்கினால் அவர்களின் பிரச்சினை என்பதை உடனடியாக கண்டறிய முயற்சியுங்கள்.
 
குறிப்பிட்ட வார்த்தைகளை அடிக்கடி உபயோகித்தல்

குழந்தைளுக்கு எப்பொழுதும் மனஅழுத்தம் உள்ளதாக கூற தெரியாது. எனவே சில சொற்களை திரும்ப திரும்ப கூறுவார்கள். அதாவது, பயமா இருக்கு, சோகமா இருக்கு என அவர்கள் கூறும் அனைத்தும் மனஅழுத்தத்தின் அறிகுறிதான். அதுமட்டுமின்றிஎன்னை யாருக்கும் பிடிக்கவில்லை “, ” நான் யாருக்கும் முக்கியமில்லை ” , ” வேடிக்கையாக எதுவும் இல்லைஎன்று அடிக்கடி கூறுவது மனஅழுத்தத்தின் வெளிப்பாடுதான். இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே இவ்வாறு குழந்தைகள் பேசும்போது அவர்கள் எண்ணம் தவறானது என்றும் உங்களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்களுக்கு புரியவையுங்கள்.
 
தந்திரங்கள்

குழந்தைகள் எப்போதெல்லாம் வசதியாக உணரவில்லையா அப்போதெல்லாம் சில திருட்டுத்தனங்கள் செய்வார்கள். அவர்களின் நடத்தையில் திடீரென ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாக நீங்கள் எச்சரிக்கையாகி விடுங்கள். மனஅழுத்தம் அதிகரிக்கும் போது குழந்தைகள் பிடிவாதமாகவோ அல்லது கோபமாகவோ நடந்து கொள்வார்கள். எளிய வேலைகளை செய்யக்கூட கோபப்படுவார்கள் அல்லது அழத்தொடங்கி விடுவார்கள். இதுபோன்ற சமயங்களில் அவர்களுக்கு தேவை உங்கள் அரவணைப்பும், அக்கறையும்தான்.
 
தூக்க பிரச்சினைகள்

உங்கள் குழந்தை தூங்கும்போது சத்தம் போடுபவராகவோ அல்லது உங்கள் மேல் கை போட்டுகொண்டு தூங்குபவராகவோ இருக்கும் பட்சத்தில் திடீரென அமைதியாக தூங்கினால் அவர்களுக்கு உடலிலோ அல்லது மனதிலோ பிரச்சினை உள்ளது என்று அர்த்தம்.தூக்கத்தில் அலறுவது, பற்களை கடிப்பது, தூங்காமல் இருப்பது போன்றவை அவர்கள் பிரச்சினையில் உள்ளார்கள் என்பதன் அறிகுறியாகும். குழந்தைகளின் தூக்கத்தில் பிரச்சினை என்பது அதிக மனஅழுத்தம், கவனமின்மை, உற்சாகமின்மை போன்றவற்றை ஏற்படுத்தும்.
 
எப்படி தடுப்பது?

குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதுதான் இதற்கான முக்கிய வழி. வெளிப்புற காரணங்கள் அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கினால் அவற்றை சரி செய்ய முயலுங்கள். அவர்களுக்காக நீங்கள் எதுவேண்டுமென்றாலும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் உண்டாக்குங்கள். இரவு உணவை உங்கள் குழந்தையுடன் சாப்பிடுங்கள். அவர்களுக்கு பள்ளி தொடர்பான வேளைகளில் உதவி செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளியே கொண்டு வந்து உங்கள் குழந்தையுடன் விளையாட வையுங்கள். மிகமுக்கியமாக தவறான தொடுதல் என்றால் என்னவென்று உங்கள் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்.♨🎯

No comments: